1) நாம் கர்த்தரோடிருந்தால் நமது வாழ்க்கை ஒரு ஜெப வாழ்க்கையாக இருக்கும் நாம் படுத்திருக்கும் அறையை
இரா ஜாமங்களிலும், நள்ளிரவு, விடிபகல் நேரங்களிலும் யாராவது பார்த்தால் நாம் முழங்காலூன்றி பரத்துக்கு நேராக நமது கரங்களை தளராது விரித்து ஜெபத்தில் போராடிக் கொண்டிருப்பதை அவர்கள் காண்பார்கள். நமது படுக்கை அறையின் விளக்குகள் இராக்காலங்களில் ஜெபத்திற்காக அவ்வப்போது எரிவதை மற்றவர்கள் எளிதாக காணலாம். தானியேல் தினமும் 3 வேளை ஜெபிப்பததை பிரதானிகளும், தேசாதிபதிகளும் கண்டார்கள் என்று தானி 6:11 ல் காணலாம். தேவ ஜனமே நீ ஜெபிப்பதை உனது கணவன்/மனைவி பிள்ளைகள் பார்க்க முடிகிறதா ?

2) நாம் கர்த்தரோடிருந்தால் நமது கிறிஸ்தவ வாழ்க்கை ஒரு உபவாச ஜெப வாழ்க்கையாக இருக்கும் ஜெபமும் உபவாசமுமே ஒரு சாதாரண மனிதனை தேவ மனிதனாக உருவாக்குகின்றது.
எத்தனையோ தேவ மக்களுக்கு ஒரு வேளை உணவை விட்டுவிடுவது என்பது எட்டிக்காயின் மகா கசப்பான அனுபவமாகும். சரியாக அந்தந்த நேரத்துக்கு ஆகாரம் அவர்களுடைய வயிற்றுக்குள் சென்றாக வேண்டும். அநேகரை சாத்தான் ஒரு குறிப்பிட்ட வயது வந்ததும் உபவாசம் என்ற வார்த்தையையே அவர்களது ஆவிக்குரிய பரிசுத்த வாழ்வின் அகராதியிலிருந்து கிறுக்கிப் போடுகின்றான். நீ உபவாசம் எடுத்த காலம்  எல்லாம் முடிந்து விட்டது விட்டது. இனி உனது உடல் நிலையானது உபவாசத்துக்கு ஒத்து வராது. இப்படி எல்லாம் சாத்தான் வஞ்சனையான போதனை கொடுத்து உபவாசத்தை முறித்து போடுவான். நமக்கு எத்தனை வயதாகிவிட்டது ?அன்னாள் தீர்க்கதரிசி 84 வயதில் கூட உபவாசம் இருந்ததாக (லூக் 2:37) வேதாகமத்தில் நாம் பார்க்கின்றோம். மனித வாழ்நாட் காலத்தின் கடைசி எல்லைக் கோடான 80 வயதையும் (சங் 90:10) தாண்டி நின்ற அந்த பரிசுத்த வாட்டிக்கு உபவாசம் அத்தனை தேவை என்றால் நமக்கு எத்தனை அதிகமான உபவாசம் அவசியம்!  தேவ சமுகத்தில் உபவாசமிருந்து அதின் காரணமாக மடிந்து போனதாக எந்த ஒரு பரிசுத்தவானை குறித்தும் திருச்சபையின் சரித்திரத்தில் எழுதப்பட்டதற்கு ஆதாரமே கிடையாது.

3) நாம் கர்த்தரோடிருந்தால் நமது வாழ்க்கை தேவன் நமக்கு அருளிய பரிசுத்த வேதாகமத்தை நாள் முழுவதும் தியானிக்கும் ஒரு தியான வாழ்க்கையாகவே இருக்கும் "உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன் ! நாள் முழுவதும் அது என் தியானம் (சங் 119:97) என்றார் தாவீது ராஜா. ஆண்டவரை அதிகமாக நேசிக்கிற ஒரு தேவ பிள்ளைக்கு தேவனுடைய வசனம் தேனிலும் தேன் கூட்டில் இருந்து ஒழுகும் தெளி நேரிலும் மதுரமாக இருக்கின்றது (சங் 19:10) அந்த தேவ வசனம் அளிக்கும் மிகுந்த சமாதானத்தில் (சங் 119:165) அது ஆறுதலோடும், அமைதலோடும் வாழ்கின்றது.  கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
சங்கீதம் 1:2

4) நாம் கர்த்தரோடிருந்தால் நாம் நம் ஆண்டவரை இயேசுவைப் போல மாற பெரிதும் வாஞ்சிப்போம்  முதல் நூற்றாண்டிலேயே கிறிஸ்தவ மார்க்கம் ஆண்டவருடைய சீடர்களில் ஒருவரான தோமாவால் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டும் அது அத்தனையான பலன் தரவில்லை. 2019 ஆனபோதிலும் அதின் வளர்ச்சி 2.5% வீதத்தில்தான் உள்ளது. காரணம் தேசத்தந்தை காந்தியடிகள் சொன்னது போல நாம் ஒவ்வொருவரும் ஒரு சின்ன இயேசுவாக புறமதஸ்தர்க்கு முன்பாக வாழ்ந்து காட்டத் தவறிவிட்டோம். கிறிஸ்து இயேசுவை போல் நாம் வாழும் வாழ்வே இன்று உலகுக்கு தேவை.

லித்தாவிலும், சாரோனிலும் குடியிருந்தார்கள் எல்லாரும் அவனை (பேதுருவை) கண்டு கர்த்தரிடத்தில் திரும்பினார்கள் (அப்போ 9:35) என்று தேவனுடைய வார்த்தை கூறுகின்றது. பேதுருவின் பிரசங்கத்தை கேட்டு கர்த்தரிடத்தில் திரும்பினார்கள் என்று எழுதப்படாமல் பேதுருவை பார்த்து கர்த்தரிடத்தில் திரும்பினார்கள் என்று கர்த்தருடைய வசனம் பேசுகின்றது. நாம் நமது வாழ்வில் இரட்சகர் இயேசுவை பிரதிபலித்தது காட்ட வேண்டும். உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்துவருவார்கள்.
ஏசாயா 60:3

"கிறிஸ்து இரட்சகரைப் போல வாழ்வதே கிறிஸ்துவைப் பிரசங்கிப்பதாகும்" (Live Christ is to preach Christ) என்றார் ஒரு தேவ பக்தன்.

நாம் பிரவேசிக்க போகிற இந்த 2020 ஆம் ஆண்டில் நாம் வெறுமனே பேச்சிலும், எழுத்திலும் நம் இயேசுவை மற்ற புறமதஸ்தருக்கு காண்பிப்பதைவிட நமது பரிசுத்தமான வாழ்வின் மூலமாக இரட்சகரை காணச் செய்வோம். நம்மை சுற்றியுள்ள மக்கள் நம்மில் எதிர் நோக்குவது இயேசுவை போன்று நாம் வாழும் வாழ்க்கையேயல்லாமல் வேறொன்றும் இல்லை.